தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் மீது எடுக்கப்பட்ட பணியிடை நீக்க நடவடிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் செவிலியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் சுப்பிரமணியம் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட சுப்பிரமணியம் மீது கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் தற்காலிக பணிநீக்க நடவடிக்கை கடந்த 5-ஆம் தேதி அறிவித்தார்.
இதையடுத்து, சுப்பிரமணியம் மீது எடுக்கப்பட்ட பணிநீக்க நடவடிக்கை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பணியிடை நீக்க நடவடிக்கையை உடனடியாக கைவிட வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சேலம் மாவட்டத் தலைவர் முருகப்பெருமாள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர்கள் வி.செல்வம், சி.கே. ராமச்சந்திரன், இணைச் செயலர் பி.சுரேஷ், செவிலியர் சங்க மாநில துணைத் தலைவர் மனோன்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.