அரசு மானியத் திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

வாழப்பாடி ஒன்றியத்தில் தோட்டக்கலைத் துறை வாயிலாக செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு அரசு

வாழப்பாடி ஒன்றியத்தில் தோட்டக்கலைத் துறை வாயிலாக செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு அரசு மானியத் திட்டங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெற, விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து வாழப்பாடி வட்டாரத் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் கே.நித்யா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வாழப்பாடி ஒன்றியத்திலுள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு பாரத பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சத மானியத்திலும் சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசனக் கருவிகள் வழங்கப்படுகின்றன. இத் திட்டத்திற்கு நிகழ் நிதியாண்டுக்கு 450 ஹெக்டேர் பரப்பளவு விளைநிலங்களுக்கு  ரூ. 275 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்  காய்கறிகள் பரப்பு விரிவாக்க திட்டத்தின் கீழ், தக்காளி, கத்திரி நாற்றுகள் மற்றும் மா ஒட்டுச் செடிகள், பப்பாளி நாற்றுகள் 100 சத மான்யத்திலும், நிலப்போர்வை, மண்புழு உரக்கூடம், சிப்பம் கட்டும் அறை, வெங்காய சேமிப்புக் கிடங்கு ஆகியவற்றுக்கு 50 சதவீத மானியத்திலும்  விவசாயிகளுக்கு வழங்குவதற்கு ரூ. 17.124 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில், நிகழ் காரீப் பருவத்தில் 2019-20 ஆண்டுக்கு அறிவிக்கை செய்யப்பட்டுள்ள மஞ்சள், சிறு வெங்காயம், மா ஆகிய பயிர்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்டுள்ள வருவாய்க் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் கடன் பெறும்போது குறைந்த காப்பீட்டு தொகை செலுத்தி காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.
சிறு வெங்காயத்துக்கு சிங்கிபுரம், பொன்னாரம்பட்டி, காட்டுவேப்பிலைப்பட்டி, சென்றாயன்பாளையம், வேப்பிலைப்பட்டி திருமனூர் ஆகிய  6 கிராம விவசாயிகள் மட்டும் ஹெக்டேருக்கு ரூ. 4,297 வீதம் செலுத்தி பயிர் காப்பீடு பெறலாம்.
மேற்கண்ட கிராமங்களைத் தவிர வாழப்பாடி ஒன்றியத்திலுள்ள மற்ற 33 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், மஞ்சள் பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ. 8,052 வீதமும், மா பயிருக்கு வேப்பிலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மட்டும் ஹெக்டேருக்கு ரூ. 2,686 காப்பீடுத்  தொகை செலுத்தி பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.
தோட்டக்கலைத் துறை வாயிலாக செயல்படுத்தப்படும் அனைத்து அரசு மானியத் திட்டங்களின் பயன்பெறுவதற்கு விவசாயிகள் தங்களது ஆதார், குடும்ப அட்டை நகல்கள், சிட்டா, அடங்கல், வங்கி சேமிப்பு புத்தகம், கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வாழப்பாடி தோட்டக்கலை அலுவலகத்துக்கு வந்து விண்ணப்பிக்கலாம்.
செல்லிடப்பேசியில் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து தேவையான திட்டங்களுக்கு பதிவு செய்தும் பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு,  உதவி தோட்டக்கலை அலுவலர்கள் விஜயக்குமார், சுகுமார் ஆகியோரை 9940448764, 8012608105 ஆகிய செல்லிடப்பேசிகளில் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்கள் மற்றும் விளக்கம் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com