கல்வராயன் மலைக் கிராமங்களில் போலீஸார் சோதனை: 3 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல்

கல்வராயன் மலைக் கிராமங்களில் போலீஸார் நடத்திய சோதனையில், புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று கள்ளத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

கல்வராயன் மலைக் கிராமங்களில் போலீஸார் நடத்திய சோதனையில், புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று கள்ளத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே பெரியக்குட்டிமடுவு வனப் பகுதியில் கடந்த மே 19-இல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட வனத் துறையினர், வனத்தையொட்டி குடிசைக்குள் இயங்கிய கள்ளத் துப்பாக்கி தொழிற்சாலையை கண்டுபிடித்தனர்.  வனப் பகுதியில் அரிதாகி வரும் தோதகத்தி ஈட்டி மரத்தை வெட்டும் மர்மக் கும்பல், கள்ளத்தனமாக நாட்டு ரக துப்பாக்கிகளைத் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இக் கும்பல் விட்டுச் சென்ற 2 நாட்டுத் துப்பாக்கிகள்,  16 ஈட்டி மரத் துப்பாக்கி கட்டைகள், உதிரி பாகங்கள் மற்றும் தயாரிப்பு உபகரணங்கள் உள்ளிட்ட 32 பொருள்களையும் கைப்பற்றிய வாழப்பாடி வனத் துறையினர், மே 27-ஆம் தேதி வாழப்பாடி  நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். 
இதற்கிடையே, கள்ளத் துப்பாக்கி தொழிற்சாலையாக இயங்கி வந்த குடிசை கடந்த 22-ஆம் தேதி மர்மமான முறையில் தீயில் எரிந்து சாம்பலானது.  கள்ளத் துப்பாக்கி கட்டைகள் பறிமுதல் வழக்கில் முக்கிய தடயமாக இருந்த குடிசையை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துவிட்டதாக தகவல் வெளியானது.
அருநூற்றுமலை மற்றும் கல்வராயன் மலைப்  பகுதியிலுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏரளமான கள்ளத் துப்பாக்கிகள் புழக்கத்தில் இருக்கலாம் என்பதால்,  வனத் துறையினரும், போலீஸாரும் இணைந்து மலைக் கிராமங்களில் அதிரடி சோதனை நடத்த வேண்டுமென கோரிக்கை எழுந்தது.  இதுகுறித்து தினமணியில் விரிவான செய்தி வெளியானது.
இந்நிலையில்,  சேலம் போலீஸ் எஸ்.பி. தீபா கனிகர் தலைமையில், ஏ.டி.எஸ்.பி. அன்பு, டிஎஸ்பிக்கள் சூரியமூர்த்தி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீஸார்  மற்றும் வனத் துறையினர் மூன்று கூட்டுப்படைகள் அமைத்து, கல்வராயன் மலை, கருமந்துறை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் புதன்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, அத்திமரத்துக்காட்டு வலவு, ஈச்சங்காடு, தேக்கம்பட்டு ஆகிய கிராமங்களில், புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உரிமம் இல்லாத 3 நாட்டுத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.  இதுகுறித்து, கருமந்துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சேலம் போலீஸ் எஸ்.பி. தீபா கனிகர் கூறியது: வனப் பகுதியையொட்டிய மலைக் கிராமங்களில் வனத் துறையினருடன் இணைந்து சோதனை நடத்துவது வழக்கமான ஒன்றுதான்.  கல்வராயன் மலைக் கிராமங்களில் கள்ளத் துப்பாக்கிகள் புழக்கத்தில் இருக்கலாமென சந்தேகம் ஏற்பட்டதால், கூட்டுப் படை அமைத்து சோதனை நடத்தப்பட்டது. உரிமம் பெறாமல் கள்ளத் துப்பாக்கிகளை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.  எனவே, பொதுமக்கள் யாரேனும் அனுமதி பெறாத துப்பாக்கிகளை வைத்திருந்தால் போலீஸாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com