துலுக்கனூர் ஊராட்சியில் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், உடனடியாக சீர் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் புதன்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள துலுக்கனூர் ஊராட்சியில், இந்திரா நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாராமல் கடந்த இரண்டு மாதங்களாக கிடப்பில் உள்ளன. இதனால், கால்வாய்களில் கழிவுநீர் நிரம்பி தெருவில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள குழந்தைகள் காய்ச்சலால் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், கொசுத் தொல்லை, பாம்பு, புழுக்கள் என வீட்டில் நுழைவதாக குற்றம்சாட்டுகின்றனர். குடிநீர் விநியோகத்தின் போது, கழிவுநீரில் குடம் வைத்து பிடிக்கும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். எனவே, இதனை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.