சேலம் மாவட்டம், வீரபாண்டி வேளாண் துறை சார்பில், பயிர்க் காப்பீடு மற்றும் தண்ணீர்ப் பாசனம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
அக்கரபாளையம் கிராமத்தில் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்தியன் வங்கி இணைந்து நடத்திய நிதியியல் கல்வி வாரம் குறித்த நிகழ்ச்சியில், வேளாண் துறை சார்பில் பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம், தண்ணீர்ப் பாசனம் மற்றும் ராணுவப் படைப்புழு தாக்குதல் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
வேளாண் உதவி இயக்குநர் என்.நாகபசுபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, காரிப் பருவத்தில் இயற்கை இடர்பாடுகளால் நிலச்சரிவு, மழை, புயல் மற்றும் வறட்சி ஆகியவற்றால் பயிர்கள் விதைப்பு செய்ய இயலாது போகுதல் மற்றும் விதைப்பு பொய்த்தல், விதைப்பு முதல் அறுவடை வரையிலான மகசூல் இழப்பு, அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு ஆகியவற்றால் விவசாயிகள் பாதிப்பிலிருந்து விடுபட பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா என்ற பயிர்க் காப்பீடு திட்டம் செயல்பட்டு வரும் முறை பற்றி எடுத்துரைத்தார்.
வேளாண் அலுவலர் பா.கார்த்திகாயினி நுண்ணீர்ப் பாசனத்தின் முக்கியத்துவம் குறித்தும், இதில் 100 சதவீதம் முதல் 75 சதவீதம் வரையிலான மானியம் பற்றியும் எடுத்துரைத்தார். மேலும், துணை வேளாண் அலுவலர் தே.சீனிவாசன் பயிர்களில் ராணுவப் படைப்புழு தாக்குதல் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து எடுத்துரைத்தார்.
முகாமில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் கே.ராஜேந்திரன், உதவி வேளாண் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் சிவசங்கர், தீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.