சேலம், ஜூன் 13: தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து, சேலத்தில் புதுமணத் தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தபடி சாலையில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழகம் முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், அதனால் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் காவல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழக அரசின் இந்த முயற்சிக்கு துணை செய்யும் வகையில், சேலத்தில் திருமணம் முடிந்த புதுமணத் தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து சென்றனர்.
சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்த கீர்த்திராஜ், தனசிரியா ஆகியோருக்கு திருமணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையடுத்து, இருவரும் பொதுமக்களிடையே தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மணக்கோலத்தில் தலைக்கவசம் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவு பயணம் மேற்கொண்டனர். அப்போது, இருவரும் சாலையில் சென்றபோது, அவ்வழியே வந்த வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணிவது குறித்தும், உயிர் பாதுகாப்பு குறித்தும் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, மணமக்களுடன் அவர்களது நண்பர்கள் சிலரும் சென்றனர்.