முதல்வர் மாநில இளைஞர் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலஅலுவலர் ஆ.ஞானசுகந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, 2015 முதல் "முதல்வர் மாநில இளைஞர் விருது' ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.50 ஆயிரம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவை உள்ளடக்கியதாகும்.
2019-ஆம் ஆண்டுக்கான முதல்வர் மாநில இளைஞர் விருது வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. 15 வயது முதல் 35 வயதுவரையுள்ள ஆண், பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். 15 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் மற்றும் 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் (2018-2019) அதாவது 1.4.2018 முதல் 31.3.2019 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
விருதுக்கு விண்ணப்பிக்கும் முன் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக்கப்பட வேண்டும்).
விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றி இருக்க வேண்டும். அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 2 மாலை 5 மணியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.