இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பின் உயரிய விருதான "டேக்வாண்டோ ஹாலோ ஆப் பார்ம் இந்தியா' விருது மேட்டூரை சேர்ந்த இளைஞர் வீ.ஜீவானந்தத்துக்கு கிடைத்துள்ளது.
இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு சார்பில், பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில் நடப்பாண்டில் விமானப்படை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலிருந்து 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களில் மேட்டூர் சின்னக்காவூர் கிராமத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் (36) என்பவரும் தேர்வு செய்யப்பட்டார். இவர் இளம் வயதிலேயே நான்காம் நிலை கருப்புப் பட்டைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் எகிப்து, தாய்லாந்து, நேபாளம், இந்தியாவில் நடைபெற்ற நான்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 1 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். தேசிய அளவிலான போட்டிகளில் 5 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து, மாநில அளவிலான டேக்காவண்டோ போட்டியை நடத்தினார். இவர் தமிழ்நாடு டேக்வாண்டோ ஸ்போர்ட்ஸ் அகாதெமியின் மாநில செயலராகவும் உள்ளார்.
இம்மாதம் 15-இல் உத்தரப்பிரதேச மாநிலம், லக்னௌவில் நடைபெற்ற விழாவில் "டேக்வாண்டோ ஹாலோ ஆப் பார்ம் இண்டியா' விருதை இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பின் பொதுச் செயலர் ஜிம்மிஜெகத்யணி ஜீவானந்தத்துக்கு வழங்கினார். இந்திய ராணுவத்தினர், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் தென்னிந்திய அளவில் தேர்வு செய்யப்பட்டவர் ஜீவானந்தம் மட்டுமே. சொந்த கிராமத்துக்கு வந்த அவருக்கு, திருச்சி காவல் துணை ஆணையர் மயில்வாகனன் மற்றும் அன்னை குழுமத்தினர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.