ஓமலூர் வட்டாரத்தில் விவசாயிகள் இலவசமாக நுண்ணீர்ப் பாசனம் அமைத்துக்கொள்ள ஓமலூர் வேளாண் உதவி இயக்குநர் நீலாம்பாள் அழைப்பு விடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டாரத்தில் பிரதம மந்திரி நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து கொடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோன்று நீர் ஆதாரங்களில் இருந்து விவசாயத் தோட்டங்களுக்கு குழாய் பதிக்க ஒரு ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. இல்லாவிட்டால் அமைக்கப்படும் குழாய்களின் மதிப்பில் 50 சதவீத மானியம் வழங்கப்படும். மேலும், தோட்டங்களில் கான்கிரீட் தொட்டி அமைக்க அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஏற்கெனவே சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து ஏழு ஆண்டுகள் ஆகியிருந்தால், தற்போது மீண்டும் மானியத்துடன் அவற்றை புதுப்பித்துக்கொள்ளலாம் என ஓமலூர் வேளாண் உதவி இயக்குநர் நீலாம்பாள் தெரிவித்துள்ளார்.