சேலம் அருகே குடும்பப் பிரச்னையில் மனைவியைக் கொலை செய்த கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், மல்லூரை அடுத்த நாழிக்கல்பட்டி வெடிக்காரன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (40). இவரது மனைவி தங்கமணி (37). இத்தம்பதிக்கு மோனிஷா (20) என்ற மகளும், ரவிகுமார் (18) என்ற மகனும் உள்ளனர்.
கூலித் தொழிலாளியான இவர் நாள்தோறும் மது அருத்திவிட்டு மனைவியிடம் தகாராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்தார் என தெரிகிறது.
இதனால் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, தங்கமணி அருகில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டாராம். இதனிடையே, சுப்பிரமணி பலமுறை சமரசப்படுத்தி அழைத்தும் தங்கமணி வீட்டுக்கு வரவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சுப்பிரமணி தனது மனைவி தங்கமணியை சந்திக்க சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி மதுபோதையில் தங்கமணியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடினார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த தங்கமணியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், வழியிலேயே தங்கமணி உயிரிழந்தார்.
இச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த மல்லூர் போலீஸார் சுப்பிரமணியை தேடி வருகின்றனர்.