கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள போக்குவரத்துக் காவலர்களுக்கு தொப்பிகளை மாநகர காவல் ஆணையர் கே.சங்கர் வழங்கினார்.
கோடை காலம் தொடங்கும் முன்னரே தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் தற்போது கடுமையாக உள்ளது.
குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக 100 டிகிரியைத் தாண்டி வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் சேலத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துக் காவலர்களுக்கு தொப்பி, கண்ணாடி மற்றும் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் கே.சங்கர், துணை ஆணையாளர்கள் பி.தங்கதுரை மற்றும் சியாமளா தேவி ஆகியோர் கலந்துகொண்டு போக்குவரத்துக் காவலர்களுக்கு வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள தொப்பி மற்றும் கண்ணாடிகளை வழங்கினர்.
இதைத்தொடர்ந்து, போக்குவரத்துக் காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாநகர காவல் ஆணையர் கே.சங்கர் பேசுகையில், ஆண்டுதோறும் கோடை காலங்களில் வெப்பத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள போக்குவரத்துக் காவலர்களுக்கு மாநகர காவல்துறை சார்பில் நீர்மோர் வழங்குவது வழக்கமாகும். அந்த வகையில் நீர்மோர் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 மாதங்களுக்கு சேலம் மாநகர பகுதிகளில் போக்குவரத்துக் காவலர்கள் பணியாற்றும் இடத்துக்கே நேரடியாக நீர் மோர் விநியோகம் செய்ய மாநகர காவல் துறை ஏற்பாடு செய்துள்ளது என்றார்.