தாண்டவராயபுரத்தில் குடிநீர் வழங்கக் கோரி, பொதுமக்கள் காலி குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆத்தூரை அடுத்துள்ள தாண்டவராயபுரத்தில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் சரியாக விநியோகம் இல்லை எனத் தெரிகிறது.இதனால் கோபமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் ஆத்தூர்- ராசிபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் ஊரக காவல் நிலையக் காவலர்கள் விரைந்து சென்று பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.ஆனால் பொதுமக்கள் சமாதானம் அடையவில்லை.
இதையடுத்து, ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் விரைந்து சென்று பொதுமக்களிடம் குடிநீர் கிடைக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இதனால் அரை மணி நேரம்
போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.