பெண் கல்வி, சுகாதாரம் ,இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் குறித்த சேலம் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் தம்மம்பட்டி அரசுப் பள்ளி மாணவி 3ஆம் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பெண் கல்வி, சுத்தம் சுகாதாரம், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் தொடர்பாக பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் அந்தந்த பள்ளி அளவிலும், அதைத்தொடர்ந்து வட்டார அளவிலும் நடத்தப்பட்டது. சேலம் மாவட்டத்தில் 21 வட்டாரங்களில் முதலிடம் பிடித்தவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டி மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதி சேலத்தில் நடைபெற்றது. அதில் 3ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான பிரிவு பேச்சுப் போட்டியில் தம்மம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி மு.சந்தியா, மாவட்ட அளவில் மூன்றாம் இடம்பிடித்து சாதனை படைத்தார். வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு விழா மார்ச் 15ஆம் தேதி சேலத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தினர், மாணவி சந்தியாவுக்கு ரூ.2500- க்கான காசோலையையும், சான்றிதழையும் வழங்கிப் பாராட்டினர்.