xமக்களவைத் தேர்தலையொட்டி நடைபெற்ற வாகனச் சோதனையின்போது, கணக்கில் வராமல் கொண்டு வரப்பட்டதாக ரூ.1.20 லட்சத்தை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டத்துக்குள்பட்ட கெங்கவல்லி அருகே ஒதியத்தூர் ஊராட்சிக்குள்பட்ட ஒதியத்தூர் கேட் எனப்படும் பிரிவு சாலை பேருந்து நிறுத்தப் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் தலைமையிலான 1-ஆவது பறக்கும் படையினர் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆத்தூரை நோக்கி வந்த காரை தேர்தல் பறக்கும்படையினர் சோதனை செய்தபோது, கணக்கில் வராத ரூ. 1.20 லட்சம் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் காரில் வந்தவர் திருவாரூர் மாவட்டத்துக்குள்பட்ட பரவக்கோட்டையைச்சேர்ந்த கவிச்செல்வன் என்பதும், நெல் கதிரடிக்கும் இயந்திரத்துக்கு உதிரி பாகங்கள் வாங்குவதற்காகப் பணத்தை எடுத்துவந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதிக்கான உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் வேடியப்பனிடம் பணம்
ஒப்படைக்கப்பட்டு, கருவூலத்தில் செலுத்தப்பட்டது.