கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6, 7 , 8 -ஆம் வகுப்புகள் கற்பிக்கும்120 உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான படைப்பாற்றல் குறித்த வலுவூட்டும் பயிற்சி தம்மம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலர் அந்தோணிமுத்து தலைமை வகித்தார். ஆசிரியப் பயிற்றுநர்கள் பச்சையம்மாள், சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல் பாடங்களை கற்பிக்கும் படிநிலைகளை உரிய உதாரணங்கள், புரஜெக்டர் உதவியுடன் கருத்தாளர்கள் காமாட்சி, உஷா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
தம்மம்பட்டி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த கண்பார்வையற்ற தமிழாசிரியர் சகாயராஜ், தமிழ் பாடக் கருத்துகள் குறித்து கூடுதலாக பயிற்சி அளித்தார்.
இதேபோல் கெங்கவல்லி வட்டார வள மையத்தில் ஆசிரிய பயிற்றுநர் செல்வராஜ், கருத்தாளர் காளிமுத்து ஆகியோர் பயிற்சி அளித்தனர். இரண்டு இடங்களிலும் நடைபெற்ற பயிற்சியில் ஒன்றியம் முழுவதிலும் இருந்து 120 உயர்தொடக்கநிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.