கெங்கவல்லி அருகே வீரகனூரில் ஏடிஎம்-இல் பணம் நிரப்பக் கொண்டு வரப்பட்ட ரூ. 1.21 கோடியை திங்கள்கிழமை மாலை ஆவணங்கள் இல்லாததால் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூரைச் சேர்ந்த தீரன் என்பவர், ஏடிஎம் வாகனத்தை ஒட்டிக் கொண்டு வீரகனூருக்கு திங்கள்கிழமை வந்தடைந்தார். அந்த வாகனத்தில் ரூ. 1.21கோடி பணம் இருந்தது. அப்போது வீரகனூர் தனியார் வங்கி ஏடிஎம் அருகே அலுவலர் குணசேகரன் தலைமையிலான பறக்கும் படையினர் அந்த வாகனத்தைச் சோதனை செய்தனர். அப்போது, அந்த வாகனத்தில் இருந்த பணம், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏடிஎம்-இல் நிரப்புவதற்குத்தான் ஆவணங்கள் இருந்தன. ஆனால், அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு, சேலம் மாவட்டம் வீரகனூர் எடுத்து வருவதற்கோ, வீரகனூரில் உள்ள ஏடிஎம்-இல் நிரப்புவதற்கு எந்த ஆவணங்களும் இல்லை. அதையடுத்து பறக்கும் படையினர், ரூ. 1 கோடியே 21 லட்சத்தை பறிமுதல் செய்தனர். சேலத்திலிருந்து இரவு வந்த வருமானவரித் துறையினர், பறிமுதல் செய்யப்பட்ட பணம் விவரம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.