குடிநீர் கோரி ஆத்தூர் காந்தி நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
ஆத்தூர் நகராட்சி 25-ஆவது வார்டு கோரித் தெருவில் செவ்வாய்க்கிழமை இரவு மேட்டூர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததால், அந்த குடிநீரை எடுத்துக் கொண்டு காந்தி நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
அங்கு விரைந்து வந்த நகராட்சி மேற்பார்வையாளர் பொதுமக்களை சமாதானப்படுத்தினார். மேலும், குடிநீர்க் குழாயை ஆய்வு செய்து சரியான குடிநீர் கிடைக்க ஆவண செய்யப்படும் என்றார். ஆனால், சமாதானமடையாத பொதுமக்கள் தங்களுக்கு குடிநீர் வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
இதனையடுத்து விரைவில் குடிநீர் கிடைக்க ஆவண செய்யப்படும் என அதிகாரிகள் கூறியதன் பேரில் அனைவரும் கலைந்துசென்றனர்.