பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் 6 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லாமல் இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுக்கும் பணிகள் சங்ககிரி வட்டப் பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்றன.
சேலம் மாவட்ட பள்ளி இடைநின்ற மாணவர்கள் திட்டக்கூறு ஒருங்கிணைப்பாளர் சசிகலா சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பக்காளியூர், தாசநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது 3 மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் இடையில் நின்றவர்கள் எனக் கண்டறியப்பட்டு அவர்களை ஜூன் மாதத்தில் பள்ளித் திறக்கும்போது அருகில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்ந்து படிக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
சங்ககிரி வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) ஜி.வெங்கடேஸ்வரி, ஆசிரியர் பயிற்றுநர்கள் செல்வராணி, சீனிவசான், அய்யனார் ஆகியோர் ஆய்வின் போது உடனிருந்தனர்.
அதுபோல சங்ககிரி வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் சத்யா தலைமையில் தேவூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இந்த ஆய்வு நடைபெற்றன.
கே. மேட்டுப்பாளையம் பள்ளித் தலைமையாசிரியர் கே. இருதயராஜ், சிறப்பாசிரியர்கள் அருள்பிரபா, இளவரசன், கிராம நிர்வாக அலுவலர் அழகேசன், ஊராட்சி செயலர் சிவலிங்கம் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். ஆய்வில் ஒரு மாற்றுத்திறனாளி மாணவி கண்டறியப்பட்டு அவரை பள்ளியில் சேர்க்க அவரது பெற்றோரிடம் குழுவினர் அறிவுறுத்தினர்.
சங்ககிரி வட்டாரத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி முதல் நடைபெற்ற ஆய்வில் இதுவரை 18 பள்ளி இடைநின்ற மாணவர்கள், 6 மாற்றுத்திறன் குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களை உரிய பள்ளியில் சேர்க்க அவர்களது பெற்றோர் அறிவுரை வழங்கினர்.