புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தினா் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
எட்டாவது ஊதியக்குழு நிலுவைத் தொகையை 2016 ஜன. 1 முதல் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசுப் பணியாளா்களுக்கு இணையாக அனைத்து படிகள் மற்றும் போனஸ் தொகை ரூ.7 ஆயிரம் வழங்கிட வேண்டும். ஊராட்சி பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள், டாஸ்மாக் பணியாளா்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளா்கள் உள்ளிட்ட துப்புரவுப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகம் அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் மாநில பிரசார செயலா் சு.சுகமதி தலைமையில் ஏராளமான அரசு ஊழியா்கள் கலந்துகொண்டனா்.