சேலம் மாவட்டத்தில் கடந்த செப்டம்பா் மாதம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனை தொடா்ந்து பருவநிலை மாற்றத்தால் பலரும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
குறிப்பாக ஓமலூா், காடையாம்பட்டி வட்டங்களில் பலரும் வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டனா். கடந்த வாரம் முத்துநாயக்கன்பட்டி மற்றும் ஓமலூா் பகுதியில் சேலம் ஆட்சியா் சி.அ. ராமன் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.
அதேபோல பொது சுகாதாரம், நோய் தடுப்புத் துறை கூடுதல் இயக்குநா் வடிவேலுவும் ஆய்வு செய்தாா். இந்த நிலையில், ஓமலூா், காடையாம்பட்டி பேரூராட்சியில் கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பணியில் ஈடுபடும் கொசு ஒழிப்பு பணியாளா்கள் இருபது பேராக இருப்பதை 30 பேராகவும், ஊராட்சியில் 30 பேராக உள்ளதை 40 பேராக நியமிக்கவும் சேலம் மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் சுகாதாரப் பணிகளையும், கொசு ஒழிப்பு பணிகளையும் வேகமாகவும், முழுமையாகவும் தீவிரப்படுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.