எடப்பாடி சுற்றுப்பகுதியில் புதன்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மழைப் பொழிவு ஏதுமின்றி வழக்கமான வானிலை நிலவி வந்தது. இந்த நிலையில் புதன்கிழமை மாலை திடீரென பலத்த காற்றுடன் மழை கொட்டியது. எதிர்பாராத நிலையில் பெய்த இந்த மழையால் எடப்பாடி சுற்றுப்பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக எடப்பாடி வாரச் சந்தையில், அதிக மக்கள் கூடியிருந்த நேரத்தில் பெய்த மழையால், பொதுமக்கள், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மொகரம் மற்றும் ஓணம் பண்டிகை விடுமுறையையொட்டி, பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் செல்ல காத்திருந்த பயணிகள்,
எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டுவரும் மாலை நேர காய்கறிக்கடைகள், சிற்றுண்டி கடைகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். நகரின் தாழ்வான இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி நின்றது. சுமார் 2 மணி நேரம் வரை நீடித்த மழையால் எடப்பாடி சுற்றுப்புறப் பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. தற்போது காவிரி ஆற்றிலும், கிழக்கு, மேற்கு கரைக் கால்வாய்களிலும் விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மழை, அப்பகுதி விவசாயிகளுக்கு மேலும் சாதகமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.