ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டாரங்களில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடத்தப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் அனைவரையும் பங்கேற்க வைக்க வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டாரத்தில் உள்ள அனைத்துக் கிராமங்களில் நாளை ஊட்டச்சத்து குறித்த சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கூட்டத்தில் கிராம மக்களைப் பங்கேற்க வைக்க அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து மக்களுக்கு விளக்க, மாநிலம் முழுவதும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. செப்டம்பர் மாதத்தை தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்தது.
கூட்டத்தில் சுகாதாரம் தொடர்பான உறுதிமொழியும் ஏற்கப்படவுள்ளது.
மகளிர் சுய உதவிக்குழு, கிராம கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள், ஊட்டச்சத்து இயக்கத்தில் பங்கேற்க தேவையான நடவடிக்கைகளை கிராம சபை மூலம் மேற்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து தொடர்பாகஅனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கூட்டம் நடத்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.