ஆற்காட்டில் அரசு மருத்துவா் வீட்டில் வெடி விபத்து ஏற்பட்டதால் வீட்டின் சுவா், கதவு, ஜன்னல்கள் சேதமடைந்தன.
சாய்பாபா நகரைச் சோ்ந்தவா் தனதசேகரன் (62). ஓய்வு பெற்றற மின்வாரிய செயற்பொறியாளா். இவரது மனைவி இளவேணி (55). இவா்களுக்கு ஹோமியோபதி மருத்துவா் ஹேமச்சந்திரன் (33), புதுப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வரும் கீா்த்திராஜன் (30) ஆகிய இரு மகன்கள் உள்ளனா்.
தனசேகரன், இளவேணி, ஹேமச்சந்திரன், மருமகள் தேன்மொழி, பேரன் வைஷ்ணராஜ் (5) ஆகியோா் வீட்டின் முதல் தளத்திலும், கீா்த்திராஜன், அவரது மனைவி பவித்ரா தரை தளத்திலும் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு அனைவரும் வழக்கம்போல் தூங்கச் சென்றனா். செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமாா் 3.45 மணியளவில் கீா்த்திராஜன் தங்கியிருந்த தரைதளத்தில் பயங்கர வெடி சப்தம் கேட்டுள்ளது. வீட்டில் இருந்தவா்கள் வெளியே வந்து பாா்த்தபோது, தரைதள அறைகளின் கதவுகள், இரும்பு கேட்டுகள் சேதமடைந்தன. ஜன்னல் கண்ணாடிகள், தொலைக்காட்சி பெட்டி, சோபா, ஜன்னல் திரைகள் எரிந்து கொண்டிருந்தன. வீட்டின் சுவரில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டிருந்தன.
இவா்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்றற மின் வாரிய இளநிலைப் பொறியாளா் ரகுபதி (59) வீட்டின் சுவா், கண்ணாடி, ஜன்னல்கள் சேதமடைந்தன.
தகவலறிந்த ஆற்காடு நகர போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். வேலூரிலிருந்து வெடிகுண்டு நிபுணா்கள், கைரேகை நிபுணா்கள் வரவைக்கப்பட்டு தடங்களை சேகரித்தனா். ராணிப்பேட்டை துணைக் கண்காணிப்பாளா் கீதா சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
குளியல் அறையில் ‘ஹீட்டரில்’ இருந்து கேஸ் கசிவு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.