சேலத்தில் பாதுகாப்புத் துறைக்காக தொழிற் பேட்டை அமைத்து சிறுரக ஹெலிகாப்டர்கள் மற்றும் பாராசூட் தயாரிக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.
தமிழகத்தில் சேலம், கோவை, திருச்சி, ஒசூர் மற்றும் சென்னையில் ராணுவத் துறை தொழில் வழித்தடங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. வெளிநாட்டு பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சேலம் வந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம், சேலம் மாவட்டம் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்கம் சார்பில் சேலத்தில் இந்தத் திட்டத்தை விரைவுபடுத்திட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதனிடையே ராணுவ தளவாட நிலையம் அமைக்க எடுத்துள்ள நடவடிக்கை குறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர்
ஹன்ஸ்ராஜ் வர்மா, சங்கத் தலைவர் மாரியப்பனுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதுதொடர்பாக, சங்கத் தலைவர் மாரியப்பன் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
சேலத்தில் மத்திய அரசின் ராணுவத் துறைக்காக சிறு ரக ஹெலிகாப்டர்கள், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு சீருடை தயாரித்தல் போன்றவைகள் தயாரிக்க ராணுவ தளவாடதொழிற்பேட்டை அமைக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கும். இதற்காக சேலம் இரும்பாலை வளாகத்தில் பயன்படுத்தாமல் காலியாகவுள்ள நிலத்தை தமிழக அரசு மீண்டும் கையகப்படுத்தி ராணுவ தளவாடங்கள் தயாரிக்க தொழிற்பேட்டையினை உருவாக்கி அதில் ராணுவத்தினருக்குத் தேவைப்படும் சீருடைகள் தயார் செய்ய நூற்றுக்கணக்கான சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகளை அமைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும். ஆண்டுதோறும் சுமார் ரூ. 800 கோடிக்கு இதன் மூலம் வருமானம் கிடைக்கும். மத்திய அரசின் இந்துஸ்தான் விமானம் தயாரிக்கும் நிறுவனத்தின் தொழிற்நுட்பங்கள் மூலம் சேலத்தில் சிறு ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் தயாரிக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். சேலத்தில் அதிகளவில் தறிகள் மூலம் தரமான துணிகள் உற்பத்தி ஆவதால் இங்கு பாராசூட்டுகள் தயாரிக்க பெருமளவு வாய்ப்பு இருப்பதால் ராணுவத் துறைக்கு தேவைப்படும் பாராசூட்டுக்களைத் தயாரிக்க புதிதாக தொழிற்நிறுவனங்களைத் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். பாராசூட்டுகளுக்கு நல்ல ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.