தமிழகத்தில் மேல்நிலை குடிநீர்த் தொட்டி இயக்கும் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி கோவையில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சேலத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்துப் பணியாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் 12,524 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டி நீண்ட காலமாக பணியாளர்கள் போராடி வருகின்றனர்.
இப்பணியாளர்கள் இரவு பகல் பாராமல் பணிபுரிந்து, பொதுமக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவையான குடிநீர் வழங்கும் பணியை செய்து வருகின்றனர். ஆனால், மிகவும் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் இயக்கும் பணியாளர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்கிட ஆவண செய்யக்கோரி, தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை வரவழைத்து, கோவையில் கோரிக்கை மாநாடு நடத்துவது என்றும், இதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சேலம் ஏ.முருகன், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் கே.மகேஸ்வரன், தமிழ்நாடு ஊரகவளர்ச்சி துறை அனைத்து பணியாளர் சங்கத்தின் சேலம் மாவட்டத் தலைவர் பழனிவேல், முன்னாள் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் கோவை ரங்கராஜ், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜோதிமணி, காஞ்சிபுரம் கன்னியப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.