பத்து சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி, சேலம் மாவட்ட பிராமணர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள முற்பட்ட சமூகத்தில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு வேலைவாய்ப்புகளிலும், கல்வி நிலையங்களிலும் அமல்படுத்த தமிழக அரசை வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆடிட்டர் ஸ்ரீராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில துணை பொதுச் செயலர் சாய்ராம் முன்னிலையில் மாவட்டத் தலைவர் ஸ்ரீனிவாசன் தலைமையில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில், இடஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆடிட்டர் ஸ்ரீராமன் கூறுகையில், மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அனைத்து துறைகளிலும் அமல்படுத்த வேண்டி தமிழக அரசிடம் பல முறை கோரிக்கை விடுத்து இருந்தோம். ஆனால், இதுவரை மாநில அரசு அமல்படுத்தவில்லை.
எனவே, உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். இல்லையெனில் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றார்.