கெங்கவல்லி அருகே வீரகனூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 25 பேர், திட்ட அலுவலர் தர்மலிங்கம் தலைமையில் நாட்டு நலத்திட்டப் பணிகளை கடந்த 24-ஆம் தேதி முதல் செய்துவருகின்றனர்.
வீரகனூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தி மரக் கன்றுகள் நட்டனர். அதையடுத்து, தத்தெடுக்கப்பட்ட கிராமமான சொக்கனூர் அருகேயுள்ள தென்கரை அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தி மரக்கன்றுகளை நட்டனர். மூன்றாம் நாளில் ராஜகோபாலபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தி சாலையோர குப்பைகளை அகற்றினர். அரச மரக்கன்று, புங்கமரக் கன்று, வேப்பங் கன்று, பூவரச மரக்கன்று உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை அங்கு நட்டனர். செப். 27, 28 தேதிகளில் கோயில்கள் மற்றும் சொக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றி மரக்கன்று நடவு செய்யும் பணிகள் நடைபெற்றன.