கொங்கணாபுரம் அருகே கூலித் தொழிலாளி தாக்கப்பட்ட வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலஸார் தேடிவருகின்றனர்.
கொங்கணாபுரம் காவல் எல்லைக்குள்பட்ட தங்காயூர் கிராமம் அருகில் உள்ள ஊத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் நடேசன் (48) விவசாயக் கூலித் தொழிலாளி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள ஓர் விவசாய நிலத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் (42) என்பவர், நடேசனிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், சொக்கலிங்கத்துடன், அவரது மனைவி நித்யா, சகோதரர் வெங்கடேஷ்ராஜ், அவரது தாயார் ராஜம்மாள் ஆகியோர் சேர்ந்து நடேசனை தாக்கி காயப்படுத்தியதுடன், அவரது சாதிப் பெயர் குறிப்பிட்டு இழிவாகப் பேசியதாக கூறப்படுகிறது.
காயமடைந்த நடேசன் எடப்பாடி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்ட கொங்கணாபுரம் போலஸார், வெங்கடேஷ்ராஜ், ராஜம்மாள், நித்யா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சொக்கலிங்கத்தை தேடிவருகின்றனர்.