சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் சங்ககிரி நகர் பகுதியில் தீயணைப்பு நிலைய வாகனம் மூலம் செவ்வாய்க்கிழமை 4100 லிட்டர் கிருமி நாசினி தெளிக்கப்பட்டன.
கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சங்ககிரி பேரூராட்சியின் சார்பில் செயல் அலுவலர் (பொறுப்பு)செந்தில்குமரன் தலைமையில் துப்பரவு ஆய்வாளர் லோகநாதன் மேற்பார்வையில் சுகாதார மேற்பார்வையாளர்கள் சுரேஷ், வெங்கடேஸ் ஆகியோர் தினசரி பேரூராட்சிக்குள்பட்ட 18 வார்டு பகுதிகளிலும் இயந்திரங்கள் மூலம் கிருமினி நாசினிகளை தெளித்து வருகின்றனர்.
அதனையடுத்து செவ்வாய்க்கிழமை சங்ககிரி பழைய எடப்பாடி சாலை, சேலம் பிரதான சாலை ஆகிய பகுதிகளில் தீயணைப்பு நிலைய வாகனம் மூலம் 4100 லிட்டர் கிருமி நாசினியை தீயணைப்பு நிலைய அலுவலர் டி.அருள்மணி தலைமையில் வீரர்கள் சாலைகள், அரசு, தனியார் அலுவலகங்கள், வீடுகளில் தெளித்தனர்.