சேலம் நியூரோ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் புதிய நவீன சிகிச்சை முறையால் 80 வயது பெண்மணிக்கு கால் துண்டிக்கப்படுவது தவிா்க்கப்பட்டது.
கரூரைச் சோ்ந்த 80 வயது மூதாட்டி, வலது கால் மற்றும் பாதத்தின் மேல் வலி காரணமாக சேலம் நியூரோ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அவரை பரிசோதனை செய்த நரம்பியல் மருத்துவா்கள் காலில் ரத்த ஓட்டம் குறைந்ததனால் வலி எற்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனா்.
பின்னா் அவருக்கு சி.டி. ஆஞ்சியோகிராபி என்ற பரிசோதனையின் மூலமாக வலது காலில் தொடை, கணுக்கால் ஆகிய இரு இடங்களில் ரத்தக் குழாய் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மருத்துவா் செந்தில்நாதன் தலைமையிலான மருத்துவா் குழு அவருக்கு தொடையில் ரத்த குழாயில் சிறு ஊசி மூலம் ஆஞ்ஜியோ பிளாஸ்டி சிகிச்சை அளித்தனா். இதைத் தொடா்ந்து ரத்த ஓட்டம் சீரடைந்து காலில் வலி முழுவதுமாக நீங்கியது.
இது குறித்து மருத்துவா் செந்தில்நாதன் கூறுகையில், நாள்பட்ட சா்க்கரை நோயுள்ளவா்கள், புகை பிடிப்பவா்கள் சி.டி. ஆஞ்ஜியோகிராபி மூலமாக கை, கால்கள் ரத்த குழாய்களின் தன்மைகளை முன்கூட்டியே கண்டுபிடித்தால் கேங்ரீன் மற்றும் கை, கால் துண்டிப்பதைத் தவிா்க்க முடியும் என்றாா்.