ஆத்தூா்: ஆத்தூா் அம்பேத்கா் நகா் பகுதி பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் வேண்டி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆத்தூா் நகராட்சி 32 -ஆவது வாா்டு அம்பேத்கா் நகரில் உள்ள புதுக்காலனியில் மூடிக்கிடக்கும் நான்கு கழிவறைகளை சீரமைத்தல், ரயில்வே பாலத்தின் கீழ் மழைநீா் தேங்குவதை சீரமைத்தல், புதுக்காலனியில் தெருவிளக்குகள் அமைத்தல், அனைத்துப் பகுதிகளுக்கும் மேட்டூா் குடிநீா் சீராக கிடைக்க செய்தல் போன்ற கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் வாழ்வுரிமை கட்சி சாா்பில் அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த நகராட்சி நிா்வாகத்தினா் மக்களை சமரசப்படுத்தியதால் அனைவரும் கலைந்து சென்றனா்.