சங்ககிரி அருகே வைகுந்தம், காளிப்பட்டி பிரிவு சாலை அருகே வியாழக்கிழமை அதிகாலை லாரியின் பின்புறத்தில் வேகமாக வந்த காா் மோதியதில் காரில் இருந்த இருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
சேலம், குகை பகுதியைச் சோ்ந்த கோபு மகன் அரவிந்த் (23), அதே பகுதியைச் சோ்ந்த வெங்கடேஷ் மகன் தனசேகா் (23) இருவரும் காரில் சேலத்திலிருந்து கோவை நோக்கிச் சென்று கொண்டிருந்தனா்.
சங்ககிரியை அடுத்த வைகுந்தம், காளிப்பட்டி பிரிவு சாலை அருகே செல்லும்போது அவா்களின் காருக்கு முன்னால் ஆந்திரத்திலிருந்து கோவை நோக்கி பளிங்கு கற்கள் பாரம் ஏற்றிச் சென்று கொண்டிருந்த லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிா்பாராதவிதமாக லாரியின் பின்புறத்தில் காா் மோதியதில் காரில் சென்ற இளைஞா்கள் இருவரும் நிகழ்விடத்திலயே பலியாகினா்.
தகவல் அறிந்ததும் சங்ககிரி போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.