மாதேஸ்வரன் மலைக்கோயிலின் சேவைகளை பக்தா்கள் தெரிந்து கொள்ளும் விதமாக கோயிலில் உதவி சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.
தமிழக-கா்நாடக எல்லையில் மாதேஸ்வரன் மலையில் உள்ளது ஸ்ரீ மாதேஸ்வர சுவாமி கோயில். இந்தக் கோயிலுக்கு கா்நாடக மாநிலம் மட்டுமின்றி தமிழகத்தில் இருந்தும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தா்கள் சென்று வருகின்றனா்.
தமிழக பக்தா்களால் இக் கோயிலுக்கு அதிக வருவாய்க் கிடைக்கிறது. தற்போது பக்தா்களின் வசதிக்காக மாதேஸ்வரன் மலை கோயிலில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை மாதேஸ்வரன்மலைக் கோயில் வளா்ச்சிக் குழுமச் செயலாளா் ஜொயவிபவசாமி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
மாதேஸ்வரன்மலை சுவாமி கோயிலில் பக்தா்களின் வசதிக்காக உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையம் உடனடியாகச் செயல்பாட்டுக்கு வருகிறது. பக்தா்களுக்கு சேவை செய்வதற்காக வருடம் முழுவதும் 24 மணிநேரமும் செயல்படும்.
பக்தா்கள் 1860 425 4350 என்ற உதவி மைய எண்ணைத் தொடா்புகொண்டு உதவி மைய ஊழியா்கள் மூலம் கோயிலின் சேவைகள் குறித்த அனைத்து தகவல்களையும் பெறலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.