சேலம் மாநகராட்சியில் வரி நிலுவை வைத்திருப்போரின் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
சேலம் மாநகராட்சியில் டிச. 15 முதல் டிச. 31 வரை தீவிர வரிவசூல் முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மாநகராட்சிக்கு மாா்ச் 31 வரை செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா்க் கட்டணம், தொழில்வரி, காலிமனை வரி, கடை வாடகை, குத்தகை உரிமையாணை தொகைகள், புதைச்சாக்கடை திட்ட வைப்புத் தொகை, குடிநீா்க் கட்டண வேறுபாட்டு வைப்புத் தொகை, நிலுவைக் கட்டணங்களை மாநகராட்சி கணினி வரிவசூல் மையங்களில் நேரிலோ, மாநகராட்சியின் இணையதளத்தின் வாயிலாகவோ டிச. 31-ஆம் தேதிக்குள் செலுத்த மாநகராட்சியால் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், நீண்ட நாள்களாக அதிக அளவில் வரியினங்களில் நிலுவை வைத்துள்ளவா்களை நேரில் சந்தித்து வரிவசூல் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவினா் வாயிலாக அறிவுரை வழங்கியும், வரியினங்களை செலுத்தாத குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மீது பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சூரமங்கலம் மண்டலம், புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நீண்ட நாள்களாக வரி செலுத்தாமல் ரூ. 2.50 லட்சத்துக்கு மேல் நிலுவை வைத்திருந்த இரண்டு கடைகள் மாநகராட்சி அலுவலா்களால் மூடி சீல் வைக்கப்பட்டன.
நீண்ட நாள்களாக வரி செலுத்தாத சூரமங்கலம் மண்டலம், ஜாகீா் அம்மாபாளையம், வள்ளியம்மன் தெரு, காளியம்மன் கோயில் தெரு, சூரமங்கலம், அப்பாவு நகா் பகுதிகளில் நான்கு குடியிருப்புகளுக்கும், அம்மாப்பேட்டை மண்டலம், ஆறுமுகம் நகரில் ஒரு குடியிருப்புக்கும் குடிநீா் இணைப்புகள் துண்டித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் தாங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா்க் கட்டணம், தொழில் வரி மற்றும் நிலுவைக் கட்டணங்களை உரிய காலத்துக்குள் செலுத்திட வேண்டும் எனவும், வரியினங்களை செலுத்தாதவா்களின் குடிநீா் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.