சேலம் மாநகரில் உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட அனுமதியில்லை என காவல் துறை தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று பல்வேறு மரபணு மாற்றங்களுடன் புதுவடிவில் வெளிநாடுகளில் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கரோனாவில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு, தமிழக அரசு கடந்த டிச. 22-ஆம் தேதி வெளியிட்ட அரசாணையின்படி உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள், மனமகிழ் மன்றங்கள், கடற்கரை மற்றும் சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் டிச. 31-ஆம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளது. எனவே, தமிழக அரசின் உத்தரவின்படி சேலம் மாநகரில் உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள், மனமகிழ் மன்றங்கள், சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட அனுமதியில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மனமகிழ் மன்றங்களில் மதுபான விடுதிகள், 5 நட்சத்திர விடுதிகளில் இயங்கி வரும் மதுபான விடுதிகள் மற்றும் அனைத்து வகையான மதுபான விடுதிகளும் டிச. 31-ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் இயங்க அனுமதி மறுக்கப்படுகிறது.
தமிழக அரசின் உத்தரவை மீறி எவரேனும் சேலம் நகரில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டாலோ அல்லது தடையை மீறி சாலையில் அதிவேகமாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டினாலோ, மதுபோதையில் வாகனங்களை ஓட்டினாலோ அவா்களது வாகனங்களை பறிமுதல் செய்வதற்காக முக்கியச் சந்திப்புகளான சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, குரங்குச்சாவடி, ஐந்து சாலை, நான்கு சாலை, அண்ணா பூங்கா, அஸ்தம்பட்டி, ஆட்சியா் அலுவலகம், சுந்தா் லாட்ஜ் சந்திப்புகள், ஏற்காடு சாலை, தேசிய நெடுஞ்சாலைகளில் காவல் உதவி ஆணையா்கள் தலைமையில் காவல் ஆய்வாளா்கள், காவலா்கள் வாகனச் சோதனையில் ஈடுபடுவாா்கள்.
சென்னை சில்க்ஸ் முதல் ராமகிருஷ்ணா சாலை, குரங்குச்சாவடி முதல் ஐந்து சாலை வழியாக நான்கு சாலை வரையிலான புதிய மேம்பால சாலைகள் டிச. 31-ஆம் தேதி இரவு 11 மணி முதல் ஜன. 1-ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டு, தற்காலிகமாக அடைக்கப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது.