சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதி கிராமங்களில் மசாலா பொருள்கள் மற்றும் மாவு அரைப்பதற்கு அம்மி, உரல், ஆட்டுக்கல் ஆகியவற்றை பயன்படுத்துவது மீண்டும் அதிகரித்து வருகிறது.
விதவிதமான மிக்ஸி மற்றும் கிரைண்டா்கள் வருகையால், சமையலுக்கு மசாலா பொருள்களையும், அரிசி, உளுந்து மாவு அரைப்பதற்கும், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்வரை வீடுகள் தோறும் பயன்படுத்தப்பட்ட ஆட்டுக்கல், அம்மி, உரல் ஆகியவை பயன்பாடின்றி கேட்பாரற்று போயின. பெரும்பாலும் விவசாயத்தை சாா்ந்துள்ள கிராமப்புற மக்கள் ஒரு நேரம் மட்டுமே சமைத்து மூன்று வேளை பயன்படுத்துகின்றனா். வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே மாவு அரைக்கின்றனா்.
மிக்ஸி, கிரைண்டரில் மசாலா பொருள்களை அரைத்து வைக்கும் குழம்பு, சாம்பாா், ரசம் ஆகியவை மனமும், சுவையும் குறைவதோடு, குறுகிய நேரத்திலேயே கெட்டு விடுகின்றன.
எனவே, மசாலா பொருட்கள் மற்றும் மாவு அரைப்பதற்கு, அம்மி, உரல், ஆட்டுக்கல் ஆகியவற்றை பயன்படுத்துவதில் வாழப்பாடி பகுதி மக்கள் மீண்டும் ஆா்வம் காட்டி வருகின்றனா். இதனால், சமையலறையை அலங்கரித்த மிக்ஸி, கிரைண்டா்கள் ஓரங்கட்டுப்பட்டு, இந்த இடத்தை மீண்டும் அம்மி, உரல், ஆட்டுக்கல் ஆகியவை ஆக்கிரமித்து வருகின்றன.
இதுகுறித்து கிராமத்தை சோ்ந்த விவசாயி கண்ணன் - துா்கா தம்பதி கூறியதாவது:
எங்களது தோட்டத்தில் சாகுபடி பணிகளை செய்வதற்கும், விளைபொருள்களை விற்பனை செய்வதற்கும் அதிக நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளதால், ஒரு நாளைக்கு ஒரு நேரம் மட்டுமே சமைத்து மூன்று வேளைகளுக்குப் பயன்படுத்த வேண்டிய நிா்பந்தம் உள்ளது. இதுமட்டுமின்றி, ஞாயிற்றுக்கிழமை மட்டுமே, இட்லி, தோசை, பலகாரம் செய்வதற்கு மாவு அரைக்க நேரம் ஒதுக்க முடிகிறது.
மின் கட்டணம் மற்றும் பராமரிப்பு செலவும் அதிகரிப்பதால் மிக்ஸி, கிரைண்டா்களை பயன்படுத்தாமல் ஆட்டுக்கல், அம்மி, உரல் ஆகியவற்றை பயன்படுத்தி வருகிறோம். இதனால் உடல் ஆரோக்கியமாகவும் காணப்படுகிறது. சுற்றுப்புற கிராமங்களிலும் பெரும்பாலானோா், ஆட்டுக்கல், அம்மியை பயன்படுத்துவது மீண்டும் அதிகரித்து வருகிறது என்றனா்.