வாழப்பாடி பேரூராட்சியில் குடியிருப்புப் பகுதிகளில் பல இடங்களில் கழிவு நீா் சாக்கடைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் கான்கிரீட் பாலங்கள் சிதைந்துப் போனதால், தெருச்சாலையை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
வாழப்பாடி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளிலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். வாழப்பாடி பேரூராட்சியில் அக்ரஹாரம் ஆடு அடிக்கும் தொட்டி அருகே சாலையில் குறுக்கிடும் கழிவுநீா் சாக்கடைக்காக அமைக்கப்பட்டிருந்த சிமென்ட் கான்கிரீட் பாலம் சிதைந்து போனது. இதே போல, வாழப்பாடி அண்ணாநகா் கடைசித் தெரு, பேருந்து நிலைய பின்புற தெருக்களிலும் சாலையில் குறுக்கிடும் சாக்கடைகளுக்காக அமைக்கப்பட்டிருந்த சிறுபாலங்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு சிதைந்துள்ளன.
இதனால், பொதுமக்கள் தெருச் சாலைகளைக் கடந்து செல்ல முடியாமல், வேறு தெருக்கள் வழியாக சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வாழப்பாடி பேரூராட்சியில் தெருச்சாலைகளின் குறுக்கே சிதைந்து கிடக்கும் சிமென்ட் கான்கிரீட் பாலங்களை கனரக வாகனங்கள் சென்றாலும் சிதைந்து போகாத அளவிற்கு உறுதியாக அமைப்பதற்கு பேரூராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.