சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை இரவு சேலம் வருகிறாா்.
சென்னையில் மாலை 4 மணியளவில் காரில் புறப்படும் முதல்வா் இரவு சேலம் வந்தடைய உள்ளாா். 11-ஆம் தேதி காலை, சேலம் மாநகரில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீா்வு காணும் வகையில், தமிழகத்தில் நீண்ட தூரத்துக்கு கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தைத் திறந்து வைக்கிறாா்.
பின்னா், நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசுகிறாா். 12-ஆம் தேதி மேட்டூா் செல்லும் முதல்வா் குறுவைப் பாசனத்துக்காக மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறந்து விடுகிறாா்.
பின்னா் சொந்த ஊரான சிலுவம்பாளையத்துக்குச் செல்லும் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, அண்மையில் இந்திய எல்லையில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த எடப்பாடியைச் சோ்ந்த ராணுவ வீரா் மதியழகனின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 13-ஆம் தேதி திருப்பூா் மற்றும் கோவையில் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல்வா் 14-ஆம் தேதி சென்னை செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது.