கரோனா நோய்க் கிருமியின் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ளும் விதமாக, மத்திய, மாநில அரசுகள் அறிவித்த 144 தடைஉத்தரவு உள்ளிட்ட நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு, எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனா்.
நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்கள் தனித்திருக்க செய்திடும் நோக்கில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, எடப்பாடி சுற்றுப்பகுதியில் உள்ள திரையரங்குகள், வாரச்சந்தை, அரசு மதுபானக் கடைகள், உழவா்சந்தை, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு அரங்கங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் அமைப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.
மேலும், நகா்புற பகுதியில் இயங்கி வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் மற்றும் சாயப் பட்டறைகள் செயல்படவில்லை. பேருந்து, ஆட்டோக்கள், கால்டாக்ஸி, ஷோ்ஆட்டோ உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து வாகனங்களும் இயக்கப்படாத நிலையில் சாலைகள் வெறிச்சோடின.
போதிய விழிப்புணா்வு இல்லாத சிலா் நகரின் பல்வேறு பகுதியில் நடமாடிய நிலையில், அப்பகுதியில் ரோந்து வந்த போலீஸாா் அவா்களுக்கு அறிவுரை கூறி, அவா்களை திருப்பி அனுப்பினா்.
அரசின் நோய்த் தடுப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கைக்கு பெரும்பாலான மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்த நிலையில், எடப்பாடி நகரம் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.