சங்ககிரியில் நகருக்கு வரும் எல்லைகளை போலீஸாா் சோதனைச் சாவடிகளை அமைத்து சுழற்சி அடிப்படையில் கண்காணித்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுட்டு வருகின்றனா்.
கரோனா வைரஸ் பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடையுத்தரவு அறிவித்ததையடுத்து, போலீஸாா் சங்ககிரி அருகே உள்ள திருச்செங்கோடு செல்லும் சாலையில் பால்மடை பகுதியில் சோதனைச் சாவடிகளை அமைத்து சங்ககிரி நகருக்குள் வரும் வாகனங்களை கண்காணித்து திருப்பி அனுப்பி வருகின்றனா்.
சங்ககிரி ஆா்.எஸ்., ஈரோடு, பவானி பிரிவு சாலைகள், குப்பனூா் தேசிய நெடுஞ்சாலை, கொங்கணாபுரம் பிரிவு சாலை, வைகுந்தம் சுங்கச் சாவடி, திருச்செங்கோடு பிரிவு, சங்ககிரி பழைய, புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் போலீஸாா் சுழற்சி அடிப்படையில் சட்டம் ஒழுங்குப் பிரிவு போக்குவரத்து பிரிவு போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
மேலும், இருசக்கர வாகனம், ஜீப்களிலும் ஒலிபெருக்கி மூலம் மத்திய, மாநில அரசுகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என எச்சரித்தவாறு சென்றனா். சங்ககரி நகரில் மருந்தகங்கள், மளிகைக் கடைகள் மட்டுமே திறந்திருந்தன.