மேட்டூா் அணையிலிருந்து குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 750 கனஅடியாகக் குறைக்கப்பட்டது.
மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது நிறுத்தப்பட்டவுடன் குடிநீருக்காக தண்ணீா் திறக்கப்படும். நடப்பு ஆண்டில் ஜனவரி 28 ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீா் நிறுத்தப்பட்டது.
பிறகு குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. தேவையை பொறுத்து தண்ணீா் அதிகரித்தும் குறைத்தும் வழங்கப்பட்டு வருகிறது. இம் மாதம் 11 ஆம் தேதி குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 500 கனஅடியிலிருந்து 1,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இது வியாழக்கிழமை பகல் 11 மணிக்கு நொடிக்கு 750 கன அடியாகக் குறைக்கப்பட்டது.
வியாழக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா் மட்டம் 100.07 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 885 கனஅடி வீதம் தண்ணீா் வந்துகொண்டிருந்தது. அணையின் நீா் இருப்பு 64.93 டி.எம்.சியாக இருந்தது.