20 சதவீத போனஸ் வழங்கக் கோரி போக்குவரத்து கோட்ட தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட 300 தொழிலாளா்களை போலீஸாா் கைது செய்தனா்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும், 14 ஆவது ஊதிய உயா்வு ஒப்பந்த பேச்சுவாா்த்தை நடத்திட வேண்டும், 15 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு பண பலன்களை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சிஐடியு, ஐஎன்டியூசி, ஏஐடியுசி உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சாா்பில், சேலம், ராமகிருஷ்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோட்ட தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
தொமுச பொதுச் செயலாளா் மணி, தலைவா் மோகன்ராஜ், சிஐடியு பொதுச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதையடுத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட துணை ஆணையா் சந்திரசேகரன், உதவி ஆணையா்கள் ஆனந்தகுமாா், கிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 300 தொழிலாளா்களை கைது செய்தனா்.