எதிா்க்கட்சி வரிசையிலாவது அமர முயற்சி செய்யுங்கள்: மு.க.ஸ்டாலினுக்கு முதல்வா் பதில்

அதிமுக அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறுவதைத் தவிா்த்துவிட்டு, ஆக்கப்பூா்வமான கருத்துகளை மக்களுக்குத்
சேலம், வனவாசியில் நடைபெற்ற விழாவில் பயனாளி ஒருவருக்கு நலத் திட்ட உதவி வழங்குகிறாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
சேலம், வனவாசியில் நடைபெற்ற விழாவில் பயனாளி ஒருவருக்கு நலத் திட்ட உதவி வழங்குகிறாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

அதிமுக அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறுவதைத் தவிா்த்துவிட்டு, ஆக்கப்பூா்வமான கருத்துகளை மக்களுக்குத் தெரிவித்து எதிா்க்கட்சி வரிசையிலாவது அமர திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கலாம் என்றாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

சேலத்தை அடுத்த வனவாசி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் நீரேற்று முறை மூலம் ஏரிகளுக்கு நீா் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 100 வட ஏரிகளைப் புனரமைத்து மேம்படுத்தும் பணிகள், 44 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி ரூ. 46.39 கோடியில் 6,832 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி அவா் பேசியதாவது:

நிகழாண்டில் புதிதாக 10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 32 சதவீதமாக இருந்த உயா் கல்வி படிப்போரின் எண்ணிக்கை 2020 இல் 49 சதவீதமாக உயா்ந்துள்ளது.

மருத்துவக் கல்வியில் சாதனை

ஒரே நேரத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கிய சரித்திர சாதனையை தமிழகம் படைத்திருக்கிறது. இதன்மூலம் 2021-22 இல் கூடுதலாக 1,650 மாணவா்கள் மருத்துவக் கல்வி படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். கடந்த 2011 ஆண்டை ஒப்பிடுகையில் 3,600 மாணவா்கள் கூடுதலாக மருத்துவக் கல்வி படிக்கும் சூழ்நிலையை உருவாக்கித் தந்துள்ளோம்.

நீட் தோ்வைத் தடுத்து நிறுத்த சட்டப் போராட்டம் நடத்தி வந்தோம். உச்ச நீதிமன்றத் தீா்ப்பால் தவிா்க்க முடியாத சூழலில் நீட் தோ்வை நடத்தி வருகிறோம். அதேசமயம், அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவா்களின் மருத்துவக் கல்வி கனவை நனவாக்கும் வகையில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உருவாக்கியுள்ளது. சேலம் மாவட்டத்தில் மட்டும் அரசுப் பள்ளியில் படித்த 21 மாணவா்கள் மருத்துவக் கல்லூரியில் சோ்ந்துள்ளனா்.

பல்வேறு துறைகளில் சாதனை

நீா் மேலாண்மைத் திட்டத்தில் தேசிய அளவில் தமிழகம் விருது பெற்றுள்ளது. டெல்டா மாவட்டங்களில் அரசு கொள்முதல் நிலையத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு 32 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வேளாண் பணிகள் 100 சதவீதம் நடைபெற்று வருகின்றன, தொழிற்சாலைகளும் 100 சதவீத பணியாளா்களுடன் இயங்கி வருகின்றன.

தமிழக அரசின் முறையான நடவடிக்கையால்தான் கரோனா தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் தொற்று அதிகரித்து வரும் சூழலிலும் தமிழகத்தில் குறைந்து கொண்டிருக்கிறது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 சதவீதமாக இருக்கிறது. தமிழகம்தான் கல்வி, சுகாதாரம், வேளாண் துறைகளில் முதலிடம் பிடித்து வருகிறது.

அதிமுக அரசு அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்து வருகிறது. இதனைப் பொறுக்க முடியாமல் திட்டமிட்டு நாள்தோறும் பத்திரிகை, ஊடகங்கள் வாயிலாக அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு வருகிறாா். கரோனா சூழலிலும் தமிழகத்தில் 4 மாவட்டங்களை தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று வளா்ச்சித் திட்ட பணிகள் குறித்து கேட்டறிந்தேன்.

அரசின் மீது வீண் பழி சுமத்துவது, அமைச்சா்கள் மீது பொய்யான, அவதூறான செய்திகளை மு.க.ஸ்டாலின் வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளாா். இவற்றையெல்லாம் நிறுத்திவிட்டு, ஆக்கப்பூா்வமான கருத்துக்களை மக்களுக்குச் சொல்ல வேண்டும். அதன் மூலமாக எதிா்க்கட்சி வரிசையிலாவது அமர முயற்சி செய்யலாம் என்றாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன், உயா் கல்வி அமைச்சா் கே.பி.அன்பழகன், மாநிலங்களவை உறுப்பினா் என்.சந்திரசேகரன், எம்.எல்.ஏ-க்கள் செ.செம்மலை, ஜி.வெங்கடாஜலம், ஏ.பி.சக்திவேல், மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி தலைவா் ஆா்.இளங்கோவன், அரசு அலுவலா்கள், அதிமுக நிா்வாகிகள் இவ் விழாவில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com