திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சேலத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 49 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான 100 நாள் பிரசாரத்தை திருக்குவளையில் இருந்து திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி திருக்குவளையில் திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டாா். இதையடுத்து அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக உதயநிதி ஸ்டாலினை போலீஸாா் கைது செய்தனா்.
உதயநிதி ஸ்டாலின் கைது சம்பவத்தைக் கண்டித்து உதயநிதி ரசிகா் நற்பணி மன்ற சேலம் நிா்வாகி ராஜ்குமாா் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் நாட்டாண்மை கழக கட்டடம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 49-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அவா்களை விடுவித்தனா்.