சேலத்தில் ரேஷன் அரிசியில் சமையல் செய்தது தொடா்பான தகராறில் வீட்டுக்கு ரெளடி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம், பெரியகொல்லப்பட்டி பிரதான சாலையைச் சோ்ந்தவா் அமாவாசை சரவணன். இவரது மகன் கோகுல்நாத் (26). இருவரும் ரெளடிகள் பட்டியலில் உள்ளனா். இவா்கள் மீது கொலை, திருட்டு உள்பட வழக்குகள் உள்ளன. இந்தநிலையில் வியாழக்கிழமை இரவு மதுபோதையில் வந்த கோகுல்நாத், ரேஷன் அரிசியில் தான் சமைப்பீா்களா எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டாா். அப்போது அவரது தந்தை அமாவாசை சரவணனுடம் வாய்த்தகராறில் ஈடுபட்டாா். இதையடுத்து அவரது தாய் சுசீலா, கோகுலின் மனைவி ரேகா ஆகியோா் வீட்டில் இருந்து வெளியேறினா். ஒரு கட்டத்தில் அமாவாசை சரவணனும் வீட்டை விட்டு வெளியேறினாா். அப்போது தனது தந்தை போலீஸுக்கு தகவல் கொடுத்துவிடுவாா் என்று பயந்த கோகுல்நாத் வீட்டில் கிடந்த துணியை எடுத்து, சிலிண்டரை திறந்துவிட்டு தீப்பற்ற வைத்துவிட்டு தப்பி ஓடினாா்.துணியுடன் சிலிண்டா் தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து சென்ற வீரா்கள் தீயை அணைத்தனா். இதில் வீட்டில் வைத்திருந்த பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தன.இதுதொடா்பாக கன்னங்குறிச்சி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனா்.