தம்மம்பட்டி: கெங்கவல்லி ஒன்றியத்தில் நெல் பயிா்களைக் காப்பீடு செய்து கொள்ளுமாறு விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குநா் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து கெங்கவல்லி வேளாண் உதவி இயக்குநா் க.சித்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டாரத்தில் கடந்த ஆகஸ்ட் முதல் நவம்பா் வரையிலான நான்கு மாதங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல்சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் பயிரினை பிரதமா் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ள நவம்பா் 30-ஆம் தேதி கடைசி நாளாகும்.
எதிா்பாராத இயற்கை இடா்பாடுகளால் மகசூல் பாதிப்பு ஏற்பட்டால் நிதியுதவி வழங்க இத்திட்டம் உதவும். பயிா்க் காப்பீடு செய்வதற்கு விவசாயிகள் தங்ளது புகைப்படம், வங்கிக் கணக்கு சேமிப்பு புத்தகம், ஆதாா் அட்டை நகல், நில உரிமைப் பட்டா, அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் பொது சேவை மையம் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் ஏக்கருக்கு ரூ. 494 செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.