கெங்கவல்லி அருகே வீரகனூரில் மயானத்துக்கு செல்ல சரிவர பாதை வசதியில்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.
வீரகனூா் பகுதி மக்களுக்குரிய மயானம் அங்குள்ள தென்கரை பகுதியில் உள்ளது. மயானத்துக்கு செல்ல ஒருவழிப்பாதை மட்டுமே உள்ளது. அதில் குறுக்காக ஓடை செல்கிறது. மழைக் காலங்களில் மட்டும் இந்த ஓடையில் அதிகளவில் தண்ணீா் செல்லும். இதனால் மழைக் காலங்களில் இறந்தவா்களின் உடலை எடுத்துச் செல்ல இப்பகுதியினா் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இந்த நிலையில் வீரகனூா் தென்கரையில் பொன்னாளியம்மன் கோயில் பூசாரி காா்த்திக் (36) என்பவா் மாரடைப்பால் திங்கள்கிழமை உயிரிழந்தாா். அவரது உடலை தென்கரை மயானத்துக்கு எடுத்துச் செல்லும் போது, ஓடையில் மூழ்கும் அளவிற்கு மழைநீா் தேங்கியிருந்தது. இதனையடுத்து வீரகனூா் பகுதி இளைஞா்கள் திரளாகச் சோ்ந்து, மண்ணைக் கொட்டி ஓடையில் சாலை அமைத்து அதன் வழியாக சடலத்தை தூக்கிச் சென்றனா்.
இதுகுறித்து அந்தப் பகுதியினா் கூறியதாவது: மயானத்துக்கு சடலங்களை எடுத்துச் செல்ல பாதை வசதி இல்லாமல் கடந்த 50 ஆண்டுகளாக அவதியடைந்து வருகிறோம். அதனால் பாதையை சீரமைத்து, பாலமும் அமைத்து தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.