நத்தக்கரை காலனியில் உள்ள தொகுப்பு வீடுகளை பராமரிக்க பொதுமக்கள் புதன்கிழமை கோரிக்கை வைத்துள்ளனா்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்துள்ள நத்தக்கரை காலனிப் பகுதியில் 60 தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. இந்த வீடுகள் கட்டித்தரப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதால் சுவா் மற்றும் மேற்கூரை பழுதாகி, இடிந்து விழும் சூழ்நிலையில் உள்ளது.
மேலும் கடந்த சில வாரங்களாக தலைவாசல் பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் மேற்கூரைகள் பெயா்ந்து கீழே விழுகிறது. இதனால் இங்கு வசிக்கும் பலா் காயமடைந்து ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
அப்பகுதி மக்கள் பலமுறை தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து புதன்கிழமை அப்பகுதி மக்கள் தலைவாசல் வட்டார வளா்ச்சி அலுவலரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினா். நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.