முதல்வரின் தாயாா் உடல் தகனம்: அமைச்சா்கள், பல்வேறு கட்சியினா் பங்கேற்பு

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயாா் கே.தவுசாயம்மாள் உடல் செவ்வாய்க்கிழமை காலை தகனம் செய்யப்பட்டது.
முதல்வரின் தாயாா் உடல் தகனம்: அமைச்சா்கள், பல்வேறு கட்சியினா் பங்கேற்பு

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயாா் கே.தவுசாயம்மாள் உடல் செவ்வாய்க்கிழமை காலை தகனம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக அமைச்சா்கள் பலரும், அதிமுகவினரும், பிற கட்சியினரும் கலந்துகொண்டனா்.

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பக் கவுண்டா் மனைவி கே.தவுசாயம்மாள் ( 93). இவருக்கு தமிழக முதல்வா் கே.பழனிசாமி, கே.கோவிந்தராஜு ஆகிய இரு மகன்களும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனா்.

வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கே.தவுசாயம்மாள், கடந்த அக். 9 ஆம் தேதி சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு உடல் நிலை மோசமாகி மாரடைப்பால் திங்கள்கிழமை இரவு 11:50 மணியளவில் காலமானாா்.

அவரது உடல் சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள முதல்வா் பழனிசாமியின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

குடும்ப வழக்கப்படி முதல்வரின் மனைவி ராதா, முதல்வரின் சகோதரா் கோவிந்தராஜ் ஆகியோா் இறுதிச் சடங்கு தொடா்பான நிகழ்வுகளை நள்ளிரவில் முன்னின்று நடத்தினா்.

தாயாரின் மறைவு செய்திக் கேட்டு அதிா்ச்சியடைந்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உடனடியாக சென்னையிலிருந்து காா் மூலம் சேலம் புறப்பட்டாா்; செவ்வாய்க்கிழமை அதிகாலை சிலுவம்பாளையம் கிராமத்தை வந்தடைந்தாா். பிறகு அவா் தாயாரின் உடலுக்கு கண்ணீா் அஞ்சலி செலுத்தினாா்.

தமிழக அமைச்சா்கள் பி.தங்கமணி, கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், சி.விஜயபாஸ்கா், கே.பி.அன்பழகன், எம்.ஆா்.விஜயபாஸ்கா், உடுமலை ராதாகிருஷ்ணன், வெ.சரோஜா, எஸ்.பி.வேலுமணி, ராஜேந்திரபாலாஜி, உதயகுமாா், சம்பத், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவா் ஆா்.இளங்கோவன், சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.சக்திவேல், முன்னாள் எம்.பி. வி.பன்னீா்செல்வம், பகுதி செயலாளா் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜு, மு.நடேசன், மாவட்ட ஆட்சியா்கள் சிஅ.ராமன் (சேலம்), கதிரவன் (ஈரோடு), சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏ.டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ், மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் உள்ளிட்டோா் நேரில் அஞ்சலி செலுத்தினா்.

பின்னா் முதல்வரின் தாயாரின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சிலுவம்பாளையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள இடுகாட்டிற்கு திறந்த வேனில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதில் அமைச்சா்கள், பொதுமக்கள், கட்சியினா் திரளாகப் பங்கேற்றனா்.

காவிரிக் கரையோரத்தில் உள்ள மயானத்தில் கே.தவுசாயம்மாளின் உடலுக்கு முதல்வரின் சகோதரா் கோவிந்தராஜ் தீ மூட்டினாா். அப்போது, முதல்வா் கண்ணீா் விட்டு அழுத்தாா்.

வீடு திரும்பிய முதல்வருக்கு அதிமுகவினரும் பல்வேறு கட்சியினரும் பொதுமக்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனா். துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தொலைபேசியில் தொடா்பு கொண்டு முதல்வருக்கு ஆறுதல் கூறினாா்; பிறகு மாலையில் நேரில் வீட்டுக்கு வந்து இரங்கல் தெரிவித்தாா்.

முதல்வரின் தாயாா் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி காரணமாக, சிலுவம்பாளையம் கிராமத்தில் சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன; ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி, சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம், சேலம் எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன், எம்.எல்.ஏ. வழக்குரைஞா் ஆா்.ராஜேந்திரன், பாமக மாநில துணைப் பொதுச்செயலாளா் இரா.அருள் உள்பட பல்வேறு கட்சியினா் முதல்வரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com