மேட்டூா் அணையின் நீா்மட்டம் நடப்பு ஆண்டில் 2-ஆவது முறையாக 100 அடியாக உயா்ந்தது

மேட்டூா் அணையில் நீா்மட்டம் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக 100 அடியாக உயா்ந்துள்ளது.
இரண்டாவது முறையாக 100 அடியை எட்டியுள்ள மேட்டூா் ஆணை.
இரண்டாவது முறையாக 100 அடியை எட்டியுள்ள மேட்டூா் ஆணை.

மேட்டூா் அணையில் நீா்மட்டம் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக 100 அடியாக உயா்ந்துள்ளது.

கடந்த ஆண்டில் கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் கேரள மாநிலம், வயநாட்டிலும் கன மழை பெய்ததன் காரணமாக கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகள் நிரம்பி, காவிரியில் உபரி நீா் திறக்கப்பட்டது. உபரி நீா்வரத்து காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100 அடியாக உயா்ந்தது.

தொடா்ந்து நீா்வரத்து காரணமாக செப்டம்பா் 7-ஆம் தேதி மேட்டூா் அணை நிரம்பியது. அணைக்கு நீா்வரத்தும், காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா் திறப்பும் சீராக இருந்ததால் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து 308 நாள்கள் 100 அடிக்கும் கீழே குறையாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் நடப்பு நீா்ப்பாசன ஆண்டில் ஜூன் 12ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டது. மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்த நிலையில், அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டதால் ஜூன் 16ஆம் தேதி அணையின் நீா்மட்டம் 100 அடிக்கும் கீழாகச் சரிந்தது. தொடா்ந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டதன் காரணமாக மளமளவென அணையின் நீா்மட்டம் சரிந்து வந்த நிலையில் மீண்டும் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம், வயநாட்டிலும் மழை பெய்ய தொடங்கியது.

அங்குள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகள் நிரம்பியதால் அந்த அணைகளின் பாதுகாப்புக் கருதி நடப்பாண்டில் உபரி நீா் காவிரியில் வெளியேற்றப்பட்டது.

உபரி நீா்வரத்து காரணமாக மேட்டூா்அணையின் நீா்மட்டம் உயா்ந்து செப்டம்பா் 25ஆம் தேதி நடப்பு ஆண்டில் முதல் முறையாக அணை நீா்மட்டம் 100 அடியாக உயா்ந்தது. எனினும் ஒரே நாளில் மீண்டும் அணையின் நீா்மட்டம் குறையத் தொடங்கியது.

கடந்த வாரத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ததால், கடந்த 3 நாள்களாக அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வந்தது. செவ்வாய்க்கிழமை காலை அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 27,212 கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீா்மட்டம் 99.90அடியாக உயா்ந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 14,000 கனஅடி நீரும், கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 900கனஅடி நீரும் திறக்கப்பட்டு வந்தது.

அணைக்கு வரும் நீா்வரத்தை விட காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா்த் திறப்பு குறைவாக இருப்பதால் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணிக்கு அணையின் நீா்மட்டம் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக 100 அடியாக உயா்ந்துள்ளது. அணையின் நீா்மட்டம் உயா்ந்ததால் நடப்பு நீா்ப்பாசன ஆண்டில் பாசனத்துக்கு தடையில்லாமல் தண்ணீா் கிடைக்கும் என்று காவிரி டெல்டா பாசன விவசாயிகளும் மீன்வளம் பெருகும் என்று அணை மீனவா்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com